வாழ்க்கை நெறியே யோகம் என்பதே மகரிஷி வகுத்த சித்தாந்தம்.
அன்றாடங் காய்ச்சிகளுக்கும், சமூக மட்டத்தில் மிகச் சாமானியவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கும், தவம்... தியானம் ஆகியவற்றில் புறக்கணிப்புக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணினத்துக்கும் எட்ட முடியாத தொடுவானமாக இருந்த தவயோகத்தின் வாயில்களை அனைத்துத் தரப்பினருக்கும் விரியத் திறந்து வைத்திருப்பதே மகரிஷியின் எளிய முறைக் குண்டலினி யோக மனவளக் கலையின் தனிச் சிறப்பு.
மதம், மொழி, சாதி, இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகளையும், அவை உண்டாக்கி வைத்திருக்கும் புற அடையாளங்களையும் தகர்த்தபடி அறிவு ஒன்றையே தெய்வமாக்கி அறிவுக்காகவே திருக்கோயில் அமைத்து அறிவை மட்டுமே ஆராதிக்கிறது வேதாத்திரியம்.
வேதங்கள் உபநிடதங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கரை தேர்ந்த ஆன்மீக குருமார்கள் அவை குறித்த வியாக்கியானங்களையும், விளக்கங்களையும் தங்கள் சீடர்களுக்கு அளிப்பதே பொதுவான நடப்பியலில் காணக் கூடியது. ஆனால்.... மூன்றாம் வகுப்பைக் கூட முழுவதும் முடிக்க இயலாத வேதாத்திரி மகரிஷி அவர்கள் ,மேற்குறித்த அனைத்து வேத, உபநிடத சாரங்களையும் தனது உள்ளறிவின் வழிகாட்டுதலால் மட்டுமே தானாகவே கண்டடைந்திருக்கிறார் என்பதே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.(நன்றி;வடக்கு வாசல் செப்.2010)
இந்நூற்றாண்டு கண்ட மாமுனியும்,அக இருள்களான ஆசை..கோபம்..களவு..காமம் ஆகியவை மண்டிக் கிடக்கும் மனித உள்ளங்களில் , அறிவாகிய ஞான விளக்கை ஏற்றி வைத்து மனித குலத்தை உய்விக்க , வாராது வந்த மாமணியாய் வந்துதித்த மகான்
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிகளின் நூற்றாண்டு விழா
தில்லி தமிழ்ச்சங்கத்தில் நிகழும் அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள் ஞாயிறன்று மாலையில் மிகச் சிறப்பாக நிகழவிருக்கிறது.
சான்றோர்களின் செறிவான சொற்பொழிவுகளோடு நில்லாமல்,மகரிஷியின் வாழ்வைச் சித்தரிக்கும் வகையில் திருச்சி கலைக்காவிரி மாணவர்கள் வழங்கும் ‘அன்பின் அபிநயங்கள்’என்னும் நாட்டிய நாடகமும் உடன் நிகழவிருக்கிறது.
அண்மையில் தமிழகமுதல்வர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற மகரிஷி நூற்றாண்டு விழா,மற்றும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் அரங்கேறி அனைவராலும் பரவலான பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது இந் நடன நிகழ்வு.
அன்பையும் கருணையையுமே தனது வாழ்நாள் முழுவதும் போதித்து வந்த தவச்செல்வரின் வாழ்வு ‘அன்பின் அபிநயங்களாக’மேடையேறுவதைக் காணும் அரிய வாய்ப்பு தில்லி வாழ் பெருமக்களுக்குக் கிட்டியிருக்கிறது.
வேதாத்திரிய வழிகளை அறிமுகம் செய்து கொண்டு..
மகிழ்ச்சி-இன்பம்-பேரின்பம்
அடையவும்,
மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரமான
‘அன்பின் அபிநயங்க’ளைக்
கண்டு களிக்கவும்
விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க அனைத்துப் பொது மக்களையும் இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்கி வரவேற்கிறார்கள்...

.jpg)



